"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, November 18, 2013

திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.

முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.

...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...

ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...

நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar