"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, July 29, 2017

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

தஞ்சையை ஒட்டிய கிராமத்தில்
ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.


“வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்.


ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?


சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.


ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?


எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)


ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?


என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.

ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.

ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.

ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?


“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.


“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.


கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?

எங்க தொழிலே ஊரு ஊரா போறதுதேன். எங்குட்டு பிள்ளைகள ஒரு நெலையா படிக்க வைக்கிறது. ஆடு மாடுகள வாரத்துக்கு மேய்க்காமெ சொந்தமா வச்சு பண்ணையம் பாத்தவுக பிள்ளைங்க காசு, படிப்பு, வேலையின்னு இருக்காக. எங்கப்போல சிறுவ ஆடு வச்சுருக்கும் கோனாருக ஆசப்பட்டு பிள்ளைகள படிக்க வச்சாலும் பள்ளிக்கூடத்த தாண்ட முடியல. கீதாரி தொழிலும் சரிஞ்சு போச்சு. மேல படிக்க முடியாமே டிரைவரு, கண்டெக்டருன்னு வேலைக்கி போறாக.

இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.

அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.

ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?

காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.




ஆட்டு தலையில கலர் கோடு போட்டுருக்கே வேற கிடை ஆட்டோட சேந்துருச்சின்னா கண்டுபிடிக்கற அடையாளமா?

வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.

செம்மறியாட்டு கூட்டத்துல நாளு வெள்ளாடும் நிக்குதே எதுக்குங்கையா?

செம்மறியாடு சாஞ்சா சாஞ்சபக்கம் போகும். போன வழி திரும்பி வரத்தெரியாது. வெள்ளாடுதே வழிகாட்டி ஆடுக. அதுக்கு அறிவு சாஸ்த்தி பயிரு பச்சைக்கி போனா சத்தம் போட்டா திரும்பிரும். பாம்பு, விலங்கு எது வந்தாலும் உசாராயி சத்தம் கொடுக்கும். இதுகளுக்கு ஒன்னு தெரியாது. வெள்ளாடு இல்லாமெ செம்மறியாட மேச்சலுக்கு ஓட்ட மாட்டாக.

பாம்பு, விலங்கு வந்தா என்ன செய்வீங்க?

கோனா(ன்) கோலெடுக்கும் போதே வெசமருந்து கூடவே எடுத்துட்டு போவான்ம்பாக. பாம்பு தீண்டிட்டா ஆடு கத்தும் அத பாத்து கால கீரிவிட்டு மருந்து கொடுப்போம். ஆடுகள கூட்டமா பாக்குற காட்டு வெலங்குக தானா ஒதுங்கி போயிடும். வாகனத்துல அடிபட்டா எங்க வீட்டுக்காரம்மா உப்புக்கண்டம் போட்ருவாக.

இரவு நேரத்துல ஆடுகளோட தனியா படுத்துருப்பிங்க திருட்டு பயம் எதுவும் இருக்குங்களா?

ஆடு களவாடுறது உண்டுதேன். மோட்டார் பைக்குல ரெண்டு ஆட்ட பொத்தி போட்டுகிட்டு போயிருவாக. ஆடு புடிக்கிறாகன்னு தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது. ஆயிதத்தோட அஞ்சாறு பேரு வந்துருப்பே தனி ஆளா நிண்டமுட்டா போட்டு தள்ளிருவானுக. எங்களுக்கு ஆடு மேய்ப்பர் யாதவ சங்கம் இருக்கு. ஆடுதுறை வரைக்கும் எங்க ஆளுக பட்டி போட்டு ஆடு மேய்க்கிறாக, அப்புடி எங்க ஆளுக மூலியமா கேசு குடுத்து கண்டுபிடிச்சுகிடுவோம்.

ஒரு நாளு வருசத்துக்கு முன்னால இங்குட்டு(தஞ்சை) உள்ள கள்ளர்மாரு(கள்ளர்) சாதிக்காறவுக ஆட்ட களவாண்டுபுட்டாக. புதுக்கோட்ட பக்கந்தே வெள்ளாமெ வெளச்ச இல்லாம களவாடுவாக. இந்த பக்கமும் அப்படி செஞ்சுபுட்டாக. ஆட்டுக்காற சித்தப்பும், மேச்சக்கார பயலும் படுத்துருந்தாக. வண்டி வச்சு ஆடுகள ஏத்துனத பாத்துட்டு கையில இருந்த அருவாள வீசிபுட்டாரு கீதாரி. காலு நரம்புல பட்டு சுருட்டிகிட்டு விழுந்துட்டாங் களவாணிப்பய. பொறவு மந்திரி வைத்திலிங்கத்துக்கு(அ.தி.மு.க) வேண்டப்பட்டவன்னு சொல்லி கேசல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாக.

இந்த ஊருக்காரவங்க உங்கள மரியாதையா நடத்துவாங்களா? கூலியெல்லாம் சரியா தருவாங்களா?

கோடையில கெட போட்டா, மறுக்க ஆத்துல தண்ணி வந்து வெவசாயம் பாத்து அறுப்பு முடிஞ்சுதே நெல்ல கெடகூலியா குடுப்பாக. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஓடிடும். ஆனா மொறையா குடுத்துருவாக. இப்பல்லாம் ஒடனே பணமா குடுத்துருவாக. என்ன ஒன்னு பத்து கெட போட்ட எடத்துல ஒரு கெடைக்கி உண்டான கூலிய தள்ளிக்க கீதாரிம்பாக. தாயா பிள்ளையா பழகிட்டு மறுக்க முடியாது. திருவிழா வருது உங்க படியா ஏதாவது கொடுங்கண்டு உரிமையா கேப்பாக. இந்த ஊருல ஆறு மாசம் ஆடு மேச்சுகிடுதோ நமக்கும் பங்குண்டுன்னு கையில கெடச்சத குடுப்பேன். சாமிக்கி குடுத்தாதானுங்களே மழதண்ணி பேஞ்சு பயிர் பச்ச மொழைக்கும் ஆட்டுக்கு மேச்சலிருக்கும்.

சாமிக்கு காசு கொடுத்தும் மழை தண்ணி இல்லாமெ ஊரே வறண்டு கெடக்கே சாமி ஏமாத்திடுச்சாய்யா?

ஆமான்னும் சொல்லாமல் இல்லைன்னும் சொல்லாமல் அழகாக சிரித்தார்.

– நன்றி வினவு
http://www.vinavu.com/2017/06/29/life-of-ilayangudi-sheep-farmers-in-thanjavur/

4 comments:

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar