"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label ஆயர்கள். Show all posts
Showing posts with label ஆயர்கள். Show all posts

Saturday, December 10, 2016

ஆயர் விருதுகள் 2015

வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES






Tuesday, January 12, 2016

முல்லையின் சிறப்புகள்

முல்லையின் சிறப்புகள்
முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம்.

ஏறு தழுவல்

ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க
வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)


(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)

போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.

ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை

கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)

(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)

என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.

இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.

இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.

ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

எருமைக் கொம்பை வழிபடல்


ஆயர் தம் வீட்டில் திருமணம் முதலிய நிகழ்வு நிகழும்போது செம்மண் பூசுவர். இளமணலை வீட்டின் முன்பக்கம் பரப்புவர். பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடுவர்.

தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் 
(கலித்தொகை-114 : 12-14)

(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல்ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)


கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.

மூவினம் வளர்த்தல்


எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.

(1) கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.
(2) கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர்.
(3) புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்.

மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.

இஃதுஒத்தன்
கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்.
(கலித்தொகை- 103 : 32-35)

(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர்எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)

போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர்மகன் அல்லவா ? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.· பால், மோர் - விற்றல்

ஆவினத்தை வளர்த்து ஆவின் பயனான பால், மோர், வெண்ணெய் விற்று வருகிறாள் ஆயர் குலப் பெண் ஒருத்தி. தலையில் மோர்ப் பானை ஏந்திப் பெரிய ஊர்களையும், சிறிய ஊர்களையும் கடந்து செல்கிறாள் அவள். அழகும் இளமையும் நிறைய, மோருடன் வந்தவளைக் கண்டபோது ஊர் முழுவதும் ஆரவாரம் உண்டாகிறது.

காமக் கடவுள் பாலுடன் செல்லும் அழகிய ஆயர் குலப் பெண்ணைக் கண்டால் அம்புகள் பயனற்றன என்று அவற்றைக் கீழே இட்டு விடுவான் என்கின்றனர்.

இவ்வாறு பிறர் ஏவப் பால், மோர், வெண்ணெய் விற்போர் ‘வினைவல பாங்கர்’ எனக் குறிக்கப்படுகின்றனர்.


விரிச்சி கேட்டல்


தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நிற்றலை விரிச்சி கேட்டல் என்பர். முல்லை நிலப் பெண்டிரிடம் விரிச்சி கேட்கும் பழக்கம் இருந்ததை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது.

மழைக்கால மாலைப் பொழுதில் தலைவனது பிரிவால் வருந்துகிறாள் தலைவி. அவள் அரசி. போருக்குச் சென்ற அரசன் வரவில்லையே என்ற ஏக்கம் அரசிக்குத் துன்பம் செய்கிறது. பெருமுது பெண்டிர் என்று அழைக்கப்படும் வயது முதிர்ந்த பெண்கள் சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர். அக்கோவிலில் நிறை நாழி நெல்லும், முல்லை மலர்களும் தூவி வணங்கி நற்சொல் கேட்டு நிற்கின்றனர். அப்போது ஆயச்சிறுமி ஒருத்தி கூறும் சொற்கள் அவர்களது செவிகளில் நற்சொல்லாக விழுகின்றன.

சிறிய கயிற்றினால் கட்டப் பட்டிருந்த பச்சிளங் கன்றுகள் பசியுடன் தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்பார்த்துக் குரல் கொடுக்கின்றன. குளிரில் நடுங்கும் ஆயச் சிறுமி அக்கன்றுகளை நோக்கி,

இன்னே வருகுவர் தாயர் (முல்லைப்பாட்டு : 16)(இன்னே = இப்பொழுதே; தாயர் = தாய்ப் பசுக்கள்) என்கிறாள்.

தாய்ப் பசுக்கள் இப்போதே வரும் என்று பொருள் தரும் இக்கூற்றைத் ‘தலைவன் விரைவில் வந்துவிடுவான்’ எனப் பொருள்படும் நல்ல விரிச்சியாக ஏற்கின்றனர் பெருமுது பெண்டிர். இதைச் சொல்லி அரசியைத் தேற்ற ஆரம்பிக்கின்றனர்.


மகளிர் பங்கேற்றல்

முல்லைக் காட்டில் பாசறை அமைத்தான் அரசன். அப்பாசறையில் ஏவல் மங்கையர், இரவைப் பகலாக்குவது போல ஒளிவீசும் வாளைக் கச்சில் வரிந்து கட்டி, நெய்யை ஊற்றும் திரிக்குழாயைக் கையில் ஏந்தி, இடப்பட்ட பாவை விளக்கு அவியும் நேரமெல்லாம் மீண்டும் நெய் ஊற்றி விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தனர். (முல்லைப்பாட்டு : 46-49)

போர்க்களம் செல்லும் ஆடவர்களின் வீரத்திற்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்ற கருத்தை இப்பெண்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.· அரசனை வாழ்த்தல்

முல்லை நிலப் பெண்கள் அரசனை வாழ்த்திக் குரவையிட்டுக் கூத்தாடுவது உண்டு. ஏறு தழுவிய பின் குரவையிடும் வழக்கமும் உண்டு. மன்னன் பாண்டியனை வாழ்த்துவதைச் சில முல்லைக் கலிப் பாடல்கள் காட்டுகின்றன.

சான்று : கலித்தொகை 103 ஆம் பாடல்.

Friday, January 8, 2016

மூவினம் வளர்த்தல் (மூவினத்து ஆயர்கள்)

எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.

  1.  கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.
  2.  கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர்.
  3. புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்.

மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.

இஃதுஒத்தன்
கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்.
(கலித்தொகை- 103 : 32-35)

(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர்எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)

ஆயர்போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர்மகன் அல்லவா ? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.· பால், மோர் - விற்றல்

ஆவினத்தை வளர்த்து ஆவின் பயனான பால், மோர், வெண்ணெய் விற்று வருகிறாள் ஆயர் குலப் பெண் ஒருத்தி. தலையில் மோர்ப் பானை ஏந்திப் பெரிய ஊர்களையும், சிறிய ஊர்களையும் கடந்து செல்கிறாள் அவள். அழகும் இளமையும் நிறைய, மோருடன் வந்தவளைக் கண்டபோது ஊர் முழுவதும் ஆரவாரம் உண்டாகிறது.

காமக் கடவுள் பாலுடன் செல்லும் அழகிய ஆயர் குலப் பெண்ணைக் கண்டால் அம்புகள் பயனற்றன என்று அவற்றைக் கீழே இட்டு விடுவான் என்கின்றனர்.

இவ்வாறு பிறர் ஏவப் பால், மோர், வெண்ணெய் விற்போர் ‘வினைவல பாங்கர்’ எனக் குறிக்கப்படுகின்றனர்.


Friday, October 2, 2015

கரந்தைத்திணை

ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றானகாஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ளபுறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ளஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

வெட்சித்திணை:



பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகைஅரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இதுவெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.


கரந்தைத்திணை: பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர்,கரந்தைத்திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.

ஆநிரை மீட்கச் செல்லல்

வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற தமது ஆநிரையைக் கரந்தை வீரர் மீட்டு வருதல் பொருட்டுச் செல்வதைப் பற்றிக் கரந்தை அரவம், அதரிடைச் செலவு என்னும் இரு துறைகள் கூறுகின்றன(அதா் - வழி).


கரந்தை அரவம்

பறிகொடுத்த ஆநிரைகளை மீட்பதற்காக, மன்னனின் ஆணைப்படி மறவர் கூடுகின்றனர். அப்போது எழும் முழக்கம் ஆதலின் கரந்தை அரவம்எனப்பட்டது. அரவம் - ஒலி; ஓசை.

கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவதுகரந்தை அரவம் எனப்பெறும்.

நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய

விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:

கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட

வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்

கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே

உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.




வெண்பாவின் பொருள்

கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.

துறைப் பொருத்தம்

இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.


அதரிடைச் செலவு


அதர் - வழி; செலவு - செல்லுதல். நிரை மீட்சியில் இறங்கிய கரந்தையார், வெட்சி மறவர்கள் நிரையுடன் செல்லும் வழியிடைச் செல்வது பற்றிக் கூறுவதால், அதரிடைச் செலவு எனப் பெற்றது.


கொளுவின் பொருளும் கொளுவும்

தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.

ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்

போற்றார் போகிய நெறியிடை ஏகின்று

Friday, August 21, 2015

ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன்

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.

மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக இருந்தது. பெரிய விலங்குகளை வளைத்து வேட்டையாடக் “கூட்டு வேட்டையும்“ தேவைப்பட்டது. வேட்டைக்காக இணைந்த மக்கள் தங்களுக்குள் வேட்டைப் பொருளினை ஓரளவிற்குச் சமமாகவே பகிர்ந்துகொண்டனர். ஆக, அக்காலத்திலே “பங்கீடும்“ அவர்களிடையே உருப்பெற்றுவிட்டது.

வேட்டையிலிருந்து வளர்த்தலுக்கு

வேட்டை உணவினை நாளும் தேடி அலையாமல் அவ் உணவினைத் தாமே பேணிப் பின் உண்ணும் திட்டம் காலச்சூழலில் ஏற்பட்டது. அவர்களின் வளர்ப்பு விலங்குகளாகப் பசுக்கள் இருந்தன.ஆடுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் பசுக்கள் அளவுக்கு முதன்மையாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலுமாக வேட்டையைக் கைவிட்டு, தம் உணவினைத் தாமே வளர்க்கத் தொடங்கினர். அவற்றை மேய்ப்பதே அவர்களின் தொழிலாகியது. அவர்கள் பயறு, வரகு, தினை, கொள், அவரை, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பசுக்களை வளர்க்கும் கூட்டங்கள் பெருகித் தனித்தனியே
வாழத்தொடங்கியன. அக்கூட்டங்களுக்குரிய உடைமைப் பொருளாகப் – சொத்தாகப் பசுக்களே இருந்தன. ஆதலால்தான், “மனித குலத்தின் முதல் உடைமை பசுக்கள்“[1] என்று வெ.மு. ஷாஜகான் கனி குறிப்பிட்டுள்ளார். அவையே அவர்களின் அசையும் சொத்து. அவர்களின் பொருளாதாரமும் உணவாதாரமும் அவையே. அவற்றால் கிடைக்கப்பெறும் அனைத்து வகையான வளங்களும் (பால் உட்பட பிற அனைத்தும்) அவர்களுக்கு முதன்மையாக இருந்தன. ஆதலால், அச்சமூகச் சூழலில் பசுக்கள் முதன்மையிடத்தினைப் பிடித்தன.

வேட்டையிலிருந்து கொள்ளைக்கு

வேட்டையை மறக்காத அதாவது, வளர்த்தலில் நாட்டமில்லாத கூட்டம் வேட்டையைக் கொள்ளையாக மாற்றிக்கொண்டது. இது, மனிதகுல வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை. சில வேடர்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தமைகான சிறு தடயங்கள் புறநானூற்றின் 323 மற்றும் 325 ஆம் பாடல் அடிகளில் காணப்படுகின்றன. அவர்கள் தோரை, ஐவனம், தினை ஆகியவற்றைப் பயிரிட்டு வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்பர். (ஆ – பசு. நிரை – கூட்டம்). ஆநிரைகளைக் கவரும் (திருடும்) கூட்டங்களும் (வேடர்) ஆநிரைகளை வளர்க்கும் கூட்டங்களுக்குச் (ஆயர்) சம அளவிலும் அவர்களுக்கு எதிர்நிலையிலும் இருந்தன. ஆயர் கூட்டத்தினர் காடுகளிலும் (முல்லைத்திணை), வேடர் கூட்டத்தினர் மலைகளிலும் (குறிஞ்சித்திணை) தங்களின் முகாம்களை அமைத்துக்கொண்டனர்.

பசுக்களைக் கொள்ளையடித்தவர்கள் மழவர், மறவர், எயினர், வேடர், குறவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும் பசுக்களை வளர்த்தவர்கள் ஆயர், கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் எனப் பல்வேறு குழுக்களாக இருந்தமையையும்ச் சங்க இலக்கிய அடிகள் சுட்டியுள்ளன.

பசுக்களை வளர்த்த இக்கூட்டத்தாருக்குள்ளும் பசுக்களைக் கொள்ளையடிக்கும் வழக்கமும் இருந்துள்ள தகவலைப் புறநானூறு 257ஆவது பாடல் தெரிவித்துள்ளது. “உடைமை“ என்று வந்தபின்னர் அதனை எப்படியாவது அபரிமிதமாகப் பெருக்கும் போக்குகளுள் ஒன்றாகத்தான் இதனையும் நோக்கவேண்டியுள்ளது.

திருடுதலும் தடுத்தலும் (அல்லது) மீட்டலும்

வேடர்கள் ஆநிரைகளைத் திருடவருதலும் அவர்களிடமிருந்து அவற்றை ஆயர்கள் காத்தலும் ஆகிய இவ் இரு நிலைகளும் சங்கத்தமிழரின் தொடக்கக் காலத்தில் தவிர்க்கமுடியாத வாழ்வியல் நிகழ்வாக இருந்தன.

பின்னாளில், இத்திருட்டு (கொள்ளை) வீரம் சார்ந்ததாகக் கருதப்பட்டது. திருடுதலும் திருட்டினைத் தடுத்தலும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டலும் வீரமாகவே போற்றப்பட்டன. திருடுதலை வெட்சித்திணை என்றும் திருட்டினைத் தடுத்தலை அல்லது பறிகொடுத்த ஆநிரைகளை மீட்டுவருதலைக் கரந்தைத்திணை என்றும் தமிழர்கள் புறத்திணைகளை வகுத்து வளர்த்தனர். இப்பாகுபாடு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பிற்கால இலக்கணநூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

களவும் கற்பும்

ஒவ்வொரு திணைக்கும் (திணை – ஒழுக்கம்) அகம், புறம் என்ற இரண்டு இணையான செயல்படு ஒழுக்க நிலைகள் உண்டு. அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழு. குறிஞ்சித்திணைக்கு ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணின் மனத்தினைக் களவாடுதல் (களவு – திருட்டு) அகத்திணையாகவும் உணவுக்காகப் பிறர் வளர்க்கும் ஆநிரைகளைக் களவாடுதல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

முல்லைத்திணைக்குப் பெண் தன் கற்பினைக் காத்தல் (காத்தல் – பேணுதல்) அகத்திணையாகவும் தம் பொருளாதாரமான ஆநிரைகளைக் காத்தல் புறத்திணையாகவும் அமைந்துவிட்டன.

குறிஞ்சி என்ற அகத்திணைக்கு வெட்சி என்ற புறத்திணையை இணையாகக்கொள்வது தமிழர் வழக்கம். அதனைப் போலவே முல்லை என்ற அகத்திணைக்குக் கரந்தை என்ற புறத்திணை இணையாகக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

திருட்டும் வீரமும்

வேடர் முதலான இனக்குழு மக்கள், ஆயர் முதலான இனக்குழு மக்கள் மேய்க்கும் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துத் திட்டமிட்டுக் கூட்டமாகச் சென்று திருடும் அல்லது கொள்ளையிடும் வழக்கத்தில் சங்கத் தமிழரின் உடல்வலிமை வெளிப்படுத்தப்படுவதால் இது அக்காலத்தில் வீரமாகவே கருதப்பட்டது.

ஒரு வகையில் இதனைக் “கூட்டுவேட்டை“ என்று தமிழாய்வாளர்கள் கூறிக்கொண்டாலும் என் கணிப்பில் இது திருட்டுதான் – கொள்ளைதான்.

இத்திருட்டினைத் தடுப்பவர்களை அல்லது தங்களது ஆநிரைகளை இழந்தவர்கள் அவற்றை மீட்கப்போராடுவதனை வீரம் என்று கொள்ளலாம்.

சங்க இலக்கிய அடிகள் இத்திருட்டினை “ஊர்ப்பூசல்“, “ஆகோள்“, “ஆகோள் பூசல்“ என்று சுட்டியுள்ளன. அதாவது, “சண்டை“ என்ற பெயரில். இது போர் அல்ல.

இத்திருட்டினை நடத்தத் தலைமைதாங்கும் இனக்குழுத்தலைவனை “உரையன்“, “நெடுந்தகை“, “மதவலி“ என்று சங்க இலக்கிய அடிகள் அழைத்துள்ளன. இத்திருட்டிற்குத் துணைபோகும் வேடர்களை “மீளியாளர்“ என்றும் இத்திருட்டினைத் தடுக்கும் ஆயர்களை “மறவர்“ என்றும் அவ் இலக்கிய அடிகள் குறிப்பிட்டுள்ளன.

திருடலாம்

வேடர் இனக்குழு ஆண்கள் இத்திருட்டு நடவடிக்கைக்கு ஆயத்தமாவது குறித்துச் சங்க இலக்கிய அடிகள் பல உள்ளன. இவர்கள், காரை மரத்தின் பழம் போல் விளைந்த கந்தாரம் குடித்து, பச்சை இறைச்சி (பச்சூன்) அதாவது, அன்று கொல்லப்பட்ட விலங்கின் தசையை உண்டு, மது அருந்தி தெம்பாகச் சென்றுள்ளனர்.(புறநானூறு – 258, 269.) ஒருவிதத்தில் இது அவர்களுக்கு இறுதி உணவாகக் கூட இருக்கலாம் அல்லவா? கொள்ளை நிகழ்ச்சியில் இவர்கள் பிடிபட்டு இறக்கவும் வாய்ப்புள்ளதே!

திருடும் வெட்சியினர் வில்லையும் அம்பினையும் பயன்படுத்தியுள்ளனர். (புறநானூறு–259.) இவர்கள் பசுக்களைக் கொள்ளையடித்து வெற்றியுடன் வரும்போது அதனைக் கொண்டாடுவதற்காக, கொள்ளையடித்துக் களைத்துவருபவர்களுக்கு வழங்குவதற்காக முதிய சாடியில் “கள்“ நிறைத்து வைத்துள்ளனர். (புறநானூறு – 258.) அதுமட்டுமல்ல, தங்கள் (கொள்ளைத்) தலைவனை வரவேற்க ஊரில் பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, கள், இறைச்சி படைத்துள்ளனர். துடிப்பறையை முழக்கயுள்ளனர்.

அக்காலத்தில் விழா கொண்டாடப் “புதுமணல் பரப்பும் வழக்கம்“ இருந்துள்ளது. அக்காலத் திருமணம் பற்றிக் கூறும் அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்களில் புதுமணல் பரப்பும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அவர்கள் கொள்ளையை விழா போலக் கொண்டாடியுள்ளனர்.

வெட்சியினர் நள்ளிரவில் பதுங்கிச்சென்று ஆநிரைகளைக் களவாடி விடிவதற்குள் தம் இருப்பிடத்திற்கு வந்துசேர்கின்றனர். வந்தவுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து.

ஒன்று – தன்னை நம்பியிருக்கும் கூட்டத்திற்கும் தன்னோடு திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் உள்ள உணவுத்தேவைகளை உடனே பூர்த்திசெய்யும் உபசரிப்பு எண்ணம்.

இரண்டு – கொள்ளையடித்து வந்த ஆநிரைகளை மீண்டும் கூட்டமாக வைத்திருந்தால் கரந்தையர் வந்து அவற்றைக் கைப்பற்றிச் செல்ல எளிதாகிவிடும் என்ற எச்சரிக்கை எண்ணம்.

மீட்கலாம்

கொள்ளையடிக்கப்பட்ட ஆநிரைகளை மீட்டுவரச் செல்லும் ஆயர் வீரனுக்கு ஆயர் குழுவினர் “கரந்தைமாலை“யை அணிவித்து அனுப்புவதனைப் புறநானூறு – 280 ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

திருட்டினைத் தடுக்கும் அல்லது திருடப்பட்டவற்றை மீட்டுவரும் கரந்தையினர் வாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைப் புறநானூறு 259ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

அவன் அப்போரில் வீரமரணமடைந்துவிட்டால் அவனுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்குப் “படலை மாலை“யைச் சூட்டி வழிபடும் மரபு இருந்துள்ளது. புறநானூறு – 265.

அறிவொளி

வெட்சியினரான வேடர்களைக் கல்வியறிவற்றவர்களாகப் புறநானூறு 263ஆவது பாடல் குறிப்புணர்த்தியுள்ளது. அப்படியென்றால், கரந்தையினர் கல்வியறிவுடையவர்களா? ஆம். அவர்கள் ஆநிரையைக் காக்க அல்லது பறிகொடுத்த ஆநிரையை மீட்டுவர நிகழ்த்தப்பட்ட கரந்தைப் பூசலில் உயிர்துறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். (புறநானூறு – 260) அந்த நடுகல்லில் இந்த நபர், இந்த இடத்தில், இவர்களுடன் நடைபெற்ற ஆகோள் பூசலில் வீரமரணமடைந்தார் என்ற செய்தியினைத் “தமிழி“ எழுத்தில் எழுதியுள்ளனர். (புறநானூறு – 260). இவற்றைப் பற்றி ராஜ் கௌதமன், “பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்பட்ட அம்சம் போலத் தெரிகிறது“[2] என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்து இந்த முறை தொடர்ந்து வந்துள்ளது. முடிமன்னர் காலத்தில் இது சடங்காக மாற்றப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு.

திருடுதல் ஒரு சடங்காக மாற்றப்படுதல்

இனக்குழு நிலை நலிவடைந்து அதாவது, பெருங்கற்கால நாகரிக எச்சங்கள் முற்றிலும் மறைந்து முடிமன்னராட்சி மலர்ந்தபோது, இத்திருட்டும் திருட்டினைக் காத்தலும் அல்லது பறிகொடுத்த பசுக்கூட்டத்தை மீட்டலுமாகிய வெட்சியும் கரந்தையும் பெரும்போருக்கு முன் நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகக் கைக்கொள்ளப்பட்டன.

இங்குப் பசுக்களைத் திருடுதல் “கவர்தல்“ என்ற சொல்லாலும் பசுக்களைக் கவரச்செல்லும் வீரர்கள் வெளிப்படுத்தும் வீரம் பூசல் என்று அழைக்கப்படாமல் “போர்“ என்ற சொல்லாலும் புலவர் மரபினரால் குறிக்கப்பட்டுள்ளன.

அதாவது, முடிமன்னர்கள் வேடர் முதலான இனக்குழு மக்களின் தலைவர்களை அழைத்து தம் எதிரி நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர (கொள்ளையிட) ஆணையிட்டுள்ளனர். இதற்கு, “வேந்து விடு தொழில்“ என்று பெயர். “பெரும்போரில் ஆநிரைகள் அழியாமல் காத்தல் வேண்டும்“ என்ற உயிர்நேய நோக்கோடு அச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது என்று கருதவேண்டும்.

அச்சடங்கின் ஒரு பகுதியாகப் பசுக்கூட்டத்தினைக் கவரச்செல்லும் (திருட்டு அல்ல) வீரர்கள் வெட்சிப்பூவையும் திருட்டினைக் காக்கும் அல்லது திருடப்பட்ட பசுக்களை மீட்கும் வீரர்கள் கரத்தைப்பூவையும் சூடும் வழக்கம் ஏற்பட்டது. இவை அச்சங்கிற்கான அடையாளப் பூக்களாக மாறின.

முடிமன்னர்கள் வெட்சிவீரர்கள் கைப்பற்றி வந்த பசுக்கூட்டங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல் வெட்சித்தலைவனுக்கும் அவனோடு சென்று வெட்சிப் போரினை (இது பூசல் அல்ல) நிகழ்த்த உறுதுணையாக இருந்த வெட்சிவீரர்களுக்கும் அவர்களுக்குரிய வரிசை அறிந்து பங்கிட்டுக்கொடுத்தனர். இது அவர்களுக்குரிய பரிசு அல்ல ஊதியம் என்று கருதவாய்ப்புள்ளது. அதாவது இத்தகைய இனக்குழு வீரர்களைத் தமது அடியாட்களாக மட்டும் (படைவீரர்களாக அல்ல) முடிமன்னர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

மார்க்ஸிய நோக்கில் இந்த வெட்சி வீரர்களின் வாழ்க்கையை ஆராயும்போது, இவர்களின இந்நிலைக்கு “உடைமைச் சமூகத்தின் பேராசையே காரணம்“ என்று எண்ணத்தோன்றுகிறது. மலைகளில் வேட்டையாடும் வேடர்கள் காடுகளில் கொள்ளைக்காரர்களாக மாறி, பின்னர் முடிமன்னர்களுக்கு அடியாட்களாக மாறிவிட்டது காலப்பிழைதான்.

– – –
ஷாஜகான் கனி, வெ.மு., “மனிதகுல வரலாறும் தொல்காப்பியமும்“, ஆய்வுக்கோவை – 2006, ப. 2346.
ராஜ்கௌதமன், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்,ப.13.

Wednesday, August 19, 2015

பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.

இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)

ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’

என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar